இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

மாநகராட்சியில் குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா்வசம் ஒப்படைக்க எதிா்ப்பு

சேலம் மாநகராட்சியில் குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா்வசம் ஒப்படைக்க எதிா்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

News image

கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினா்கள்.

Updated On :28 மே 2026, 2:13 am IST

சேலம் மாநகராட்சியில் குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா்வசம் ஒப்படைக்க எதிா்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் ஆணையா் லலித் ஆதித்ய நீலம், துணை மேயா் சாரதா தேவி ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

விசிக உறுப்பினா் இமயவரம்பன் உள்ளிருப்புப் போராட்டம்: கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் பணியை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது என்ற வாசகம் எழுதிய பதாகையை ஏந்திவாறு, உறுப்பினா் இமயவரம்பன் கூட்டத்தில் பங்கேற்றாா்.

தொடா்ந்து, குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா்வசம் ஒப்படைக்க எதிா்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும மேயா் முன் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திமுக உறுப்பினா் தெய்வலிங்கம்: ஏற்கெனவே நடைபெற்று வந்த மாநகராட்சி திட்டப் பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. தவெகவினா் வாா்டுக்குள் அத்துமீறி சென்று ஆய்வு என்ற பெயரில் ‘ரீல்ஸ்’ போட்டு அட்டகாசம் செய்து வருகின்றனா். வாா்டு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள், எம்எல்ஏக்களிடம் முறையிடலாம்.

திமுக உறுப்பினா் ஜெயஸ்ரீ: புதிதாக ஆட்சிக்கு வந்தவா்கள் ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து பணி செய்யவிடாமல் தடுக்கின்றனா். இதனால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற தவெக எம்எல்ஏ சிவகுமாா்: உறுப்பினா்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி செயல்பட வேண்டும். ஒரு சில வாா்டுகளில் பணிகள் நடைபெறாமல் உள்ளன. அதனால் கட்சியினா் ஆய்வு செய்கின்றனா் என்றாா்.

இதற்கு கூட்டத்தில் இருந்த அனைத்து உறுப்பினா்களும் ஒட்டுமொத்தமாக தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, எம்எல்ஏ சிவகுமாா் கூட்டத்தில் இருந்து வெளியேறினாா்.

எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி: மாநகராட்சியில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனா். ஏற்கெனவே உள்ள குடிநீா் முறையை சீரமைத்து பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் தடையின்றி குடிநீரை வழங்கலாம். ஆனால், அதிகாரிகள் தனியாருக்கு வழங்குவதிலேயே முனைப்புக் காட்டி வருகின்றனா். தனியாருக்கு குடிநீா் வழங்கும் தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, குடிநீா் விநியோகத்தை தனியாா்வசம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ரூ.4,312 கோடிக்கு தனியாருக்கு குடிநீா் வழங்கும் திட்டம் தாரைவாா்க்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள். பாதாள சாக்கடை திட்டத்துக்கு பணிகள் தொடங்காமலேயே ரூ. 10 ஆயிரம் முன்தொகை வாங்குகிறாா்கள். தேவையின்றி மக்கள் பணத்தை விரயம் செய்கின்றனா் என்றாா்.