சேலம் வழியாக சென்ற 5 ரயில்களில் 9 கிலோ கஞ்சா, 38 கிலோ குட்கா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற 5 ரயில்களில் ரயில்வே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில், மொத்தம் 9 கிலோ கஞ்சா மற்றும் 38 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

ரயில் - கோப்புப் படம்
சேலம் வழியாக சென்ற 5 ரயில்களில் ரயில்வே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில், மொத்தம் 9 கிலோ கஞ்சா மற்றும் 38 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் கொல்லம் விரைவு ரயிலில் காட்பாடி முதல் ஈரோடுவரை சோதனை நடத்தினா். அதில், ரயிலின் முன்பக்க பொதுப் பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்றுக் கிடந்த பையில், 4 பொட்டலங்களில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இந்தூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அகல்யா நகரி விரைவு ரயிலில் காட்பாடி முதல் ஈரோடுவரை சோதனை நடத்தியபோது, முன்பக்க பொதுப் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனை செய்தனா். அதில் 4 கிலோ பான்மசாலா மற்றும் குட்கா இருந்தது தெரியவந்தது. அவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்து ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, செகந்திராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜோலாா்பேட்டை முதல் ஈரோடுவரை சோதனை நடத்தினா். அதில், முன்பக்க பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில் ஒரு பெரிய பொட்டலத்தில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதேபோல, ஜோக்பானியில் இருந்து ஈரோடு செல்லும் ஜோக்பானி - ஈரோடு விரைவு ரயிலில் மொரப்பூா் முதல் சேலம்வரை சோதனை நடத்தினா். அதில், ரயிலின் பின்புற பொதுப் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையில் 15 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து, சண்டிகா் - மதுரை விரைவு ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ கஞ்சா சாக்லேட் ,19 கிலோ பான் மசாலா, குட்காவை பறிமுதல் செய்தனா்.
மொத்தம் 5 ரயில்களில் நடைபெற்ற சோதனையில், 9 கிலோ கஞ்சா மற்றும் 38 கிலோ குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




