கமுதி, ஜன. 8: தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கமுதி சத்திரிய நாடார் மேனிலைப் பள்ளி மாணவர்களை ராமநாதபுரம் மாவட்ட அறிவியல் இயக்கத்தினர் சனிக்கிழமை பாராட்டினர்.
சலவைத் தூள் பயன்படுத்துவதால் மண் வளத்தில் பாதிப்புகள் என்ற தலைப்பில், மா நில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. தேசிய அறிவியல் இயக்கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து இப்போட்டியை நடத்தின.
இதில் கமுதி சத்திரிய நாடார் மேனிலைப் பள்ளி மாணவர்கள் புலியுடையான், முத்துவெங்கடேஷ், அரிகரன், ராஜமார்த்தாண்டன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர், அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் வழிகாட்டுதலில் சமர்ப்பித்த கட்டுரை முதல் பரிசு பெற்றது.
முதல் இடம் பெற்ற கமுதி பள்ளி மாணவர்கள், சென்னையில் 18-வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு, தேசிய அளவில் நடைபெற்ற ஆறிவியல்
ஆய்வுக் கட்டுரைப் போட்டியிலும் கலந்து கொண்டனர். இதில் அகில இந்திய அளவிலும் கமுதி மாணவர்களின் கட்டுரை முதல் இடம் பெற்றது.
இதையடுத்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், ஆய்வுக் கட்டுரைக்
குழுத் தலைவர், மாணவர் புலியுடையானுக்கு, நோபல் பரிசு விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், வழிகாட்டுதல் ஆசிரியர் செந்தில்குமாருக்கும், ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் மூர்த்தி, கமுதி வட்டாரத் தலைவர் பா.சோமசுந்தரம், செயலர் கா.தர்மமுனியராஜ், பொருளாளர் அரிகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.