பழனி, ஜன. 8: குடும்பத்தில் அன்பும், புரிந்துணர்வும் இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என, பத்திரிகை ஆசிரியர் லேனா தமிழ்வாணன் தெரிவித்தார்.
பழனியில் வாசவி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா, தெற்கு ரத வீதி வாசவி மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆளுநர் ராமதாஸ் பொறுப்புகளை வழங்கினார். புதிய தலைவராக, பாலாஜி, செயலராக கார்த்திகேயன், பொருளாளராக பாலாஜி மற்றும் வாசவி வனிதா மன்றத் தலைவராக வாணிஸ்ரீ, செயலராக கற்பகம், பொருளாளராக சங்கீதா ஆகியோர் பொறுப்பேற்றனர்.
துணை ஆளுநர் பலராமன், வாசவி மஹால் தலைவர் பாபு, மண்டலத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட லேனா தமிழ்வாணன் பேசியதாவது:
பல்வேறு மொழிகள், மதம், இனம் என இருப்பினும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பலமாகும்.
குடும்பத்தில் அன்பும், புரிந்துணர்வும் இருந்தாலே இனிமை தானாக வரும். மனைவியைப் பாராட்டிக் கொண்டே இருப்பது இல்லறத்துக்கு மேலும் இனிமையைக் கூட்டும்.
அவமானங்களை வெகுமானங்களாக மாற்றினாலே வெற்றி கிடைத்தாற்போல ஆகும். தட்டும்போது அல்லது குட்டு வாங்கும்போது உடனே சரிசெய்து கொள்ளவேண்டும். வியாபாரம் செய்பவர்கள், வருகையாளரை வாடிக்கையாளராக மாற்ற மதித்துப் பழக வேண்டும் என்றார்.
இதையடுத்து நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மாணவர்களை வாழ்க்கையில் மதிப்புமிக்கவர்களாக மாற்றவேண்டுமே தவிர, மதிப்பெண்ணை கூட்டுவதற்காக மட்டுமே முயலுவது தவறு. படிக்கும் திறனை வளர்க்க வேண்டும். ஊடகம், கணினியில் தற்போது பலரது நேரமும் வீணாகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதத்திலேயே அவர்கள் முதியோர் இல்லத்துக்கு செல்வது முடிவு செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.
விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.