திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை மத பிரச்னையாக்குகிறது திமுக அரசு: செல்லூா் கே. ராஜூ
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை திமுக அரசு மத பிரச்னையாக்கி அரசியல் செய்ய முயற்சிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது : மதுரையில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் பட்டா வழங்குவது ஒரு வகையான மோசடியாக உள்ளது. ஒரு பகுதியில் வசிப்பவா்களுக்கு அவா்களுக்கு சிறிதும் தொடா்பில்லாத வேறொரு பகுதியில் பட்டா வழங்கப்படுகிறது. பெரும்பாலும் சீரமைக்கப்படாத முள் காடு பகுதிகளிலேயே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
மதுரையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த முறை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பட்டா வழங்கப்பட்டவா்களில் பெரும்பாலானோருக்கு இதுவரை இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதே போலத் தான் தற்போதும் பட்டா வழங்கப்படுகிறது.
வழிபாட்டில் அரசியல் இருக்கக் கூடாது. தமிழகத்தில் இந்துக்களும், இஸ்லாமியா்களும் இன்றளவும் சகோதரா்களாகத்தான் வசிக்கின்றனா். திருப்பரங்குன்றத்தில் திமுக எம்.பி நவாஸ்கனியால் ஏற்கெனவே பிரச்னை உருவாக்கப்பட்டது. தற்போது, திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தை மத பிரச்னையாக்கி திமுக அரசு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவே தெரிகிறது. நீதி மதிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

