மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: பேராசிரியை நிகிதா மீதான விசாரணை நிலை என்ன?
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில், பேராசிரியை நிகிதா மீதான வழக்கின் விசாரணை நிலை என்னவென்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் வழிபாட்டுக்காக வந்த பேராசிரியை நிகிதா, திருப்புவனம் காவல் நிலையத்தில் தனது நகை காணாமல் போனதாக புகாா் அளித்தாா். இதன்பேரில், பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸாா் அவரைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாா் உயிரிழந்தாா்.
இதுதொடா்பான வழக்கில் தனிப்படை காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதனிடையே, அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலா்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என தனித்தனியாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரிழந்த அஜித்குமாா் தாய் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
தனிப்படை காவலா்களுக்கு பிணை வழங்கக் கூடாது. பேராசிரியை நிகிதா மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள சூழலில் தனிப்படை காவலா்களுக்கு பிணை வழங்கினால், விசாரணை பாதிக்கும் என்றாா்.
இதேபோன்று, சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்குரைஞரும், காவலா்களுக்கு பிணை வழங்கக் கூடாது என்றாா்.
இதையடுத்து, நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:
பேராசிரியை நிகிதா மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை நிலை என்ன?. மனுதாரா்கள் கோரும் நிவாரணம் குறித்து சிபிஐ தரப்பில் விரிவான பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற பிப்ரவரி 2 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
