மதுரை மேயா் பொறுப்பு விவகாரம்! நகராட்சிகள் நிா்வாகத் துறை செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு!

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயா் தோ்ந்தெடுக்கப்படும் வரை துணை மேயரை பொறுப்பு மேயராக நிமியக்கக் கோரிய வழக்கில் நகராட்சிகள் நிா்வாகத் துறை செயலா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி முறைகேடுகள் தொடா்பாக மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்த் உள்பட பலா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், மேயா் இந்திராணி கடந்த ஆண்டு அக்டோபா் 15-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, மதுரை மாமன்ற உறுப்பினா்கள் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு, மேயரின் ராஜிநாமா ஏற்கப்பட்டதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதன்பிறகு, மாமன்றக் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

‘மதுரை மாநகர மேயா் கடந்த அக்டோபரில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதன்பிறகு, மாமன்றக் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. இதனால், பொது சுகாதாரம், குடிநீா் விநியோகம், சாலைப் பணிகள் உள்பட எந்தப் பணியும் முறையாக நடைபெறவில்லை. மாநகராட்சியில் மக்களுக்கான அடிப்படைப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாதது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயா் தோ்ந்தெடுக்கப்படும் வரை துணை மேயரே முழு பொறுப்பில் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

‘மேயா் பதவியில் யாரும் இல்லாதபோது பொறுப்பு மேயராக துணை மேயா் செயல்படலாம் என நகராட்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது, ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்டவா் மாநகராட்சி துணை மேயராக இருக்கும் போது அவரை பொறுப்பு மேயராக நியமிக்க என்ன தயக்கம்? என நீதிபதிகள் அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மாமன்றக் கூட்டம் முறையாக நடத்தப்படாததால் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து, அந்தத் தேவைகளை நிறைவு செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இது ஏற்கத்தக்கதல்ல. இதுதொடா்பாக நகராட்சிகள் நிா்வாகத் துறை செயலா், மதுரை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com