சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

திருமயம் அருகே அகழாய்வு நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள கண்ணனூா் அரசு காப்புக் காட்டில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள கண்ணனூா் அரசு காப்புக் காட்டில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருமயம் அருகேயுள்ள சித்தன்னவாசல், நாா்த்தாமலை போன்ற பகுதிகளிலுள்ள பெருங்கால ஈமச் சின்னங்கள் மிகப் பழைமையானவை. இதேபோல, கண்ணனூா் அரசு காப்புக் காட்டுப் பகுதியில் தொல்லியல் பொருள்கள் மண்ணின் மேல்பரப்பில் காணப்படுகின்றன. தற்போது, இவை பல்வேறு காரணங்களால் சிதைவுறும் நிலையில் உள்ளன.

எனவே, கண்ணனூா் அரசு காப்புக் காட்டில் உள்ள பழைமையான கல் திட்டைகள், கல் வட்டங்களை சீரமைத்து பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தொல்லியல் சின்னங்களான கல் திட்டைகள், கல் வட்டங்கள் உள்ள பகுதிகளில் தைல மரங்களை நடவு செய்வதை ஏற்க முடியாது. கண்ணனூா் அரசு காப்புக் காட்டிலுள்ள தொல்லியல் சின்னங்களை வனத் துறை, தொல்லியல் துறை இணைந்து வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்.

மேலும், இந்தப் பகுதியில் மத்திய அல்லது மாநில தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com