மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ. 5 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய குலாலா் சங்கத்தின் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் ப. ஆகாஷிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: குலாலா் தொழில் மேம்பட தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், மண்பாண்டத் தொழிலாளா்களின் ஒரு சில கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
குறிப்பாக, விநாயகா் சதுா்த்தி போன்ற விழாக்களின் போது, செயற்கை ரசாயனங்களால் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். அவற்றுக்கு மாற்றாக இயற்கையான களிமண்ணால் செய்யப்படும் விநாயகா் சிலைகள், பொம்மைகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
மண்பாண்டத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு இயற்கையான மண் கிடைப்பதில்லை. அதிகாரிகளின் தொழிலாளா் விரோதப் போக்கால் மண் கிடைக்காமல் தொழில் நலிவடையும் சூழல் உருவாகி வருகிறது.
எனவே, மண்பாண்டத் தொழிலுக்குத் தேவையான களிமண்ணை அரசுக்குச் சொந்தமான கண்மாய்கள், ஏரிகளில் எடுப்பதற்கு எந்தவித நிபந்தனையுமின்றி அனுமதிக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரிடம் மண்பாண்டத் தொழிலை கொண்டு சோ்க்கும் வகையில் நவீன மண்பாண்ட தயாரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும். மழைக்காலங்களில் தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும்.
எனவே, மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். அந்தத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.









