ஒட்டன்சத்திரத்தில் கந்து வட்டி தடுப்புச் சட்டத்தில் 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் கருவூல காலனியைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி (45). இவர் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் கமிஷன் கடை வைத்துள்ளார். இவர் தொழில் செய்வதற்காக தனது வீடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடம் ரூ.4.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தையும், வீட்டையும் ஈஸ்வரன், சின்னையகவுண்டன்வலசைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கு மாற்றி கொடுத்துள்ளார்.
அவர், மார்க்கம்பட்டி அடுத்துள்ள துறையூரைச் சேர்ந்த கருப்புச்சாமி (66) மற்றும் காவேரியம்மாபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (43) ஆகியோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் நிலத்தின் உரிமையாளர் கருவூலக் காலனியைச் சேர்ந்த கருப்புச்சாமிக்கு இவர்கள், ரூ.23 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளனர். அதற்காக அவர், இவர்களுக்கு மாதம் தோறும் வட்டியாக ரூ.27 ஆயிரம் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இவரை கடந்த சில மாதங்களாக கூடுதலாக மாதந்தோறும் வட்டி ரூ.35 ஆயிரம் கேட்டு அவர்கள் மிரட்டினராம். அவ்வாறு தரவில்லை என்றால் நிலம் மற்றும் வீட்டை தங்களது பெயரில் எழுதித் தர கூறினராம். இதுகுறித்து கருவூலக் காலனியைச் சேர்ந்த கருப்புச்சாமி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் துறையூர் கருப்புச்சாமி, கிருஷ்ணன், வேலுச்சாமி, ஈஸ்வரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் துறையூர் கருப்புச்சாமி மற்றும் கிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.