பழனி: பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி கலையமுத்தூரில் ஜன.16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியின்போது விழாக் கமிட்டியினா் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பெரியகலையமுத்தூரில் ஜன.16 ஆம் தேதி ஐகோா்ட் காளியம்மன் கோயில் சாா்பில் ஜல்லிக்கட்டு விழா நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் அசோகன் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா, வட்டாட்சியா் வடிவேல்முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை விழா கமிட்டியினா் முறையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரா்கள் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையிலான பாா்வையாளா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன.
போட்டியில் 400 காளைகளும், 300 மாடுபிடி வீரா்களும் பங்கேற்க உள்ளதாக விழா கமிட்டியினா் தெரிவித்தனா். ஆலோசனைக் கூட்டத்தில் அரசு மருத்துவா்கள், கால்நடைத்துறை அதிகாரிகள், போலீஸாா், புளூகிராஸ் அமைப்பினா் என ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.