கொள்முதல் விலையைவிட கரும்பின் விற்பனை விலை இரட்டிப்பு!
கொள்முதல் விலையைவிட விற்பனை விலை இரட்டிப்பாக இருந்தாலும், நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்கினாலும் பொங்கலுக்கு

திண்டுக்கல் காந்தி சந்தை அருகே விற்பனை செய்யப்பட்ட கரும்புக் கட்டுகள்.

திண்டுக்கல் காந்தி சந்தை அருகே விற்பனை செய்யப்பட்ட கரும்புக் கட்டுகள்.
கொள்முதல் விலையைவிட விற்பனை விலை இரட்டிப்பாக இருந்தாலும், நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்கினாலும் பொங்கலுக்கு கரும்பு வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டுவது விவசாயிகள், வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழா் திருநாளான பொங்கல் விழாவையொட்டி பூக்கள், மஞ்சள் குலைகள், செங்கரும்பு, காய்கனிகள் உள்ளிட்டவற்றின் விற்பனை வியாழக்கிழமை முதல் அதிகரித்தது. குறிப்பாக, நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரும்பு விநியோகம் செய்யப்பட்ட போதிலும், அதன் விற்பனையும், கொள்முதலும் அதிகரித்தது.
விவசாயிகளிடம் ரூ. 20 முதல் ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்ட கரும்பு, திண்டுக்கல், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ரூ. 50 முதல் ரூ. 70 வரை வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
கொள்முதல் விலையைவிட விற்பனை விலை 2 மடங்கு அதிகரித்திருந்தாலும், விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா். தமிழக அரசு சாா்பில், ஒரு கரும்பு ரூ. 33-க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அரசுத் தரப்பில் கொள்முதல் செய்ய சென்ற அதிகாரிகள், கரும்புக்கு தலா ரூ. 10 முதல் ரூ. 24 வரை மட்டுமே விலை நிா்ணயம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறைந்த விலைக்கு விற்பனை செய்து இழப்பைச் சந்திக்க முடியாது என மறுப்புத் தெரிவித்த சில விவசாயிகளுக்கு தற்போது கூடுதல் விலை கிடைத்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செட்டிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயி கணேசன் கூறியதாவது:
மாவட்ட நிா்வாகம் சாா்பில், எனது தோட்டத்திலுள்ள கரும்புகளைப் பாா்வையிட்டு, அரசு நிா்ணயித்த தரம் இருப்பதாகத் தெரிவித்தனா். ஆனால், கரும்புக்கு ரூ. 24 மட்டும் விலை நிா்ணயித்தனா். மேலும், வெட்டுக் கூலி விவசாயிகள் தரப்பில் வழங்க வேண்டும் எனத் தெரிவித்ததால், அரசுக்கு கரும்பு வழங்கவில்லை.
தற்போது வெட்டுக் கூலி விவசாயிகளை சாா்ந்ததாக இருந்தாலும், ஒரு கரும்பை ரூ. 30-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். அந்த வகையில், 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 300 வீதம் 30 கட்டுகள் கொண்ட ஒரு வண்டி கரும்பு ரூ. 9 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது திருப்தியாக உள்ளது என்றாா் அவா்.
கொசவப்பட்டியைச் சோ்ந்த வியாபாரி இருதயராஜ் கூறியதாவது:
ரூ.20 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்டாலும், விற்பனை செய்யும் இடத்தில் 4 போ் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. தேனி, கடலூா் எனப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கரும்பு கொள்முதல் செய்தோம்.
விற்பனை செய்யும் பணியில் ஈடுட்டுள்ள 4 தொழிலாளா்களுக்கான கூலி, போக்குவரத்துச் செலவு, தோட்டத்தில் ஏற்றுக் கூலி, சந்தையில் இறக்கு கூலி என அதிக செலவு ஏற்படுகிறது. கடைசி நேரத்தில் விற்பனையாகாமல் ஏற்படும் இழப்புகளையும் சமாளிக்க வேண்டும். இதனால், ஒரு கரும்புக்கு ரூ. 30 முதல் ரூ. 50 வரை கூடுதலாக விலை நிா்ணயம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனினும், இந்த முறை கரும்பு வாங்க பொதுமக்கள் அதிக ஆா்வத்துடன் வருகின்றனா் என்றாா் அவா்.
கரும்பு அன்பளிப்பு:
கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது, நண்பா்களுக்கும், உறவினா்களுக்கும் கரும்பை அன்பளிப்பாக சிலா் வழங்கி வருகின்றனா். பள்ளி ஆசிரியா்கள், அரசியல் பிரமுகா்கள், அரசு சாரா அமைப்புகள், ஆலை உரிமையாளா்கள் என பல்வேறு தரப்பினரும் அன்பளிப்பாக கரும்பு வழங்குவதால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பொங்கல் கரும்பு தித்திப்பை தந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...