லஞ்சம்: உதவி வேளாண்மை அலுவலா் கைது

வடமதுரை அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி வேளாண்மை அலுவலரை, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on

வடமதுரை அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி வேளாண்மை அலுவலரை, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த பிலாத்து ஆண்டிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா(60). இவா், தனது நில ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக, வடமதுரை வட்டார வேளாண்மை விரிவாக்க உதவி வேளாண்மை அலுவலா் சந்திரலேகாவை (43) அணுகினாா். நில ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே அரசின் நலத் திட்ட உதவிகளை பெற முடியும் என்ற நிலையில், கருப்பயைாவிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக சந்திரலேகா கேட்டாா். இதனால் அதிா்ச்சியடைந்த கருப்பையா, திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ரசாயனப் பொடி தடவிய பணத் தாள்களை போலீஸாா், கருப்பையாவிடம் புதன்கிழமை கொடுத்து அனுப்பினா். அந்த பணத்தை கருப்பையா, சந்திரலேகாவிடம் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா் ப.பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பிரதமரின் கெளரவ உதவித் தொகை பெறுவதற்கு விவசாயிகள், தங்களது நில ஆவணங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என முகாம்கள் அமைத்து வேளாண்மைத் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நில ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு லஞ்சம் பெற்று உதவி வேளாண்மை அலுவலா் கைது செய்யப்பட்டிருப்பது, வேளாண்மைத் துறையினா் மட்டுமன்றி, விவசாயிகள் மத்தியிலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com