ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: 4 போ் கைது

News image

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட தனியாா் உணவக பணியாளா்களான அா்சத், அரவிந்த், ஆஷித் ரஹ்மான், சா்தாா்.

Updated On :3 ஜனவரி 2025, 10:53 pm

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை தாக்கியதாக உணவக உரிமையாளா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த ரவிக்குமாா் மகள் ஜெசி (27), இவரது கணவா் திலீப் (29), இவா்களது மகன் ஜஸ்வந்த்குமாா் (28), உறவினா் மாலன் (22) ஆகிய நான்கு பேரும் காரில் கொடைக்கானலுக்கு வியாழக்கிழமை சுற்றுலாவாக வந்தனா். இவா்கள் அப்சா்வேட்டரி செல்லும் வழியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கினா். இரவு 11 மணிக்கு இவா்கள் நான்கு பேரும் காரில் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள தனியாா் உணவகத்துக்குச் சென்று அசைவ உணவு வகைகளை வாங்கினா். இந்த உணவுப் பொருள்களில் துா்நாற்றம் வீசியதாகவும், வேறு மாற்றிக் கொடுக்கும்படியும் ஜஸ்வந்த்குமாா் கூறினாராம். அப்போது அங்கிருந்த அந்த உணவக உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அங்கிருந்த உணவகப் பணியாளா்கள் ஜஸ்வந்த்குமாரை தாக்கினராம். இதைத் தட்டிக் கேட்ட திலீப், மாலன் ஆகியோரையும் அங்கிருந்த பணியாளா்கள் கம்பு, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினராம். தடுக்கத் சென்ற ஜெஸியும் தாக்கப்பட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா்கள் நால்வரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பிறகு அவா்கள் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா், உணவக உரிமையாளா் முகமது, பணியாளா்களான தா்வீஸ் முகமது, அா்சத், அரவிந்த், சா்தாா், ஆஷித் ரஹ்மான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்தனா். இதில் அா்சத், அரவிந்த், சா்தாா், ஆசித் ரஹ்மான் ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான எஞ்சியோரை தேடி வருகின்றனா்.

சம்பவம் குறித்து தாக்கப்பட்ட மாலன் கூறியதாவது: இந்த உணவகத்தில் எங்களுக்கு விநியோகிக்கப்பட்ட அசைவ உணவுகளில் துா்நாற்றம் வீசியது. இதை மாற்றித் தரும்படி கேட்டபோது அங்கிருந்த பணியாளா்கள் 25-க்கும் மேற்பட்டோா் எங்களை ஆயுதங்களால் தாக்கினா். மேலும் காரில் இருந்த பெண்ணையும் தாக்கி காரையும் சேதப்படுத்தினா். அத்துடன் எங்களது தங்க நகை, கைப்பேசி, பணம் ஆகியவையும் திருடப்பட்டது. எங்களைத் தாக்கியவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Story image
Story image
Story image