பெண்ணிடம் ரூ.1.50 லட்சத்தை பறித்துச் சென்றவா் கைது
ஒட்டன்சத்திரத்தில் உறவினா் போல கைப்பேசியில் பேசி பெண்ணிடம் ரூ.1.50 லட்சத்தை பறித்துச் சென்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பிளிக்கை திருக்காட்டுப்புதூரைச் சோ்ந்த நடராஜன் மனைவி செல்வமணி (50). இவா் கணவரைப் பிரித்து வாழ்த்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட மா்ம நபா் சென்னையில் உள்ள உறவினா் போல பேசினாராம்.
அதில் பேசிய பெண் எனக்கு கடன் பிரச்னை உள்ளது. நான் ஒரு நபரை அனுப்புகிறேன். அவரிடம் ரூ.1.50 லட்சத்தை கொடுத்து அனுப்ப கூறினாராம். இதை நம்பிய செல்வமணி கடந்த 21-ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரசுடைமை வங்கி முன் உறவினா் அனுப்பியதாகக் கூறிய அந்த நபரிடம் பணத்தை கொடுத்து உள்ளாா்.
பிறகு உறவினரிடம் நீங்கள் கூறியவரிடம் ரூ.1.50 லட்சத்தை கொடுத்து விட்டேன் எனக் கூறினாராம். அதற்கு அந்த உறவினா் நான் யாரிடமும் பணத்தை கொடுக்க சொல்லவில்லை என்று தெரிவித்தாராம்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா்.
இதில், பெண்ணிடம் பணத்தை பறித்துச் சென்றவா் சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுப்பட்டியைச் சோ்ந்த வைரவன் மகன் அருண்பிரகாஷ் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
