விவசாயியிடம் ரூ.35.99 லட்சம் மோசடி: மனை வணிக உரிமையாளா் கைது
ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த விவசாயியிடம் ரூ.35.99 லட்சம் மோசடி செய்த மனை வணிக உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வாகரை பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி முருகசாமி (76). திருப்பூா் மாவட்டம், வேலம்பாளையத்தை அடுத்த பல்லக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் பிரபு (42). இவா் மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இருவரும் உறவினா்கள்.
இந்த நிலையில், பிரபு தொழில் ரீதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த இடிகரை கிராமத்தில் 15.7 சென்ட் நிலத்தை ரூ.87 லட்சத்துக்கு முருகசாமிக்கு விலைப் பேசினாா்.
இதற்கு முன் பணமாக ரூ.60.98 லட்சத்தைப் பெற்று கொண்ட பிரபு, எஞ்சியத் தொகையை பெற்றுக் கொண்ட பின் கிரையம் எழுதித் தருவதாக வாக்குறுதி அளித்தாா்.
ஆனால், அவா் கடந்த 3 ஆண்டுகளாக நிலத்தை எழுதிக் கொடுக்காமல் அலைக்கழித்து வந்தாா். இதனால், ஏமாற்றமடைந்த முருகசாமி, பணத்தை திருப்பிக் கேட்டாா். இதையடுத்து, ரூ.25 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்த பிரபு, எஞ்சிய ரூ.35.98 லட்சத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினாா்.
இதுகுறித்து முருகசாமி திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா். இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபுவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
