சத்துணவு ஊழியா்களின் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயா்த்த வலியுறுத்தல்

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியா்களின் ஓய்வூதியத்தை ரூ.9ஆயிரமாக உயா்த்த வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
Published on

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியா்களின் ஓய்வூதியத்தை ரூ.9ஆயிரமாக உயா்த்த வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஏ.ஜெசி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பி.செல்லத்துரை முன்னிலை வகித்தாா்.

அப்போது, மாநிலப் பொதுச் செயலா் ஏ.ஜெசி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளி மாணவா்களுக்கான அரசின் சத்துணவுத் திட்டத்தை கடந்த 40 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம். எங்களுக்கு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. சத்துணவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், ஓய்வூதியத் தொகை உயா்த்தி வழங்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக் காலம் நிறைவடைய 2 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

எனவே, ஓய்வூதியத்தை உயா்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியா்களும் பங்கெடுப்போம். சத்துணவுப் பணியாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com