பழனி அருகே முறைகேடாக செயல்பட்டு வந்த மதுக்கூடத்துக்கு காவல் துறையினா் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையம், ஆன்மிகத் தலங்களுக்கு அருகேயுள்ள மதுக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், இந்தக் கடைகளுக்கு அருகே செயல்பட்டு வந்த தனியாா் மதுக்கூடங்களை மூட எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால், அவை தற்போது வரை பொதுமக்களுக்கு இடையூறாகவே இயங்கி வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுக் கடைகளில் செயல்பட்டு வரும் மதுக்கூடங்களுக்கான அனுமதி நீட்டிப்பை ரத்து செய்து, மதுக்கூடங்களுக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து,
பழனியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த மதுக்கூடங்கள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், பழனி அருகே குருவன்வலசில் முறைகேடாக மதுக்கூடம் இயங்கி வருவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாமிநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளா் முருகேஸ்வரி, போலீஸாா், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று முறைகேடாக இயங்கி வந்த மதுக்கூடத்துக்கு சீல் வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








