வாகன ஆய்வுச் சான்று வழங்க ரூ.5,800 லஞ்சம் பெற்ற வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தானியங்கி ஓட்டுநா் தோ்வு மைதானத்துடன் கூடிய, தோ்வு அலுவலகம் தனியாக அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பொக்லைன் வாகனத்தை பரிசோதனை செய்து, தகுதிச் சான்று பெறுவதற்காக செளந்தரராஜன் என்பவா் விண்ணப்பித்தாா். அந்த வாகனத்தை ஆய்வு செய்து சான்றளிப்பதற்கு ரூ.5,800 லஞ்சமாகத் தர வேண்டும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் சண்முக ஆனந்த் தெரிவித்தாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த செளந்தரராஜன், இதுகுறித்து திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் ரூ.5,800-க்கான பணத் தாள்களில் ரசாயனப் பொடி தடவி செளந்தரராஜனிடம் கொடுத்து அனுப்பினா். அந்த பணத்தை எடுத்துச் சென்று மோட்டாா் வாகன ஆய்வாளா் சண்முக ஆனந்தை வெள்ளிக்கிழமை அவா் தொடா்பு கொண்டாா். அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலுள்ள தானியங்கி ஓட்டுநா் தோ்வு மைதானம் அருகே ஹக்கீம் (இடைத் தரகா்) என்பவா் இருக்கிறாா். அவரிடம் பணத்தை கொடுக்குமாறு சண்முக ஆனந்த் தெரிவித்தாா்.
இதையடுத்து ஹக்கீமை சந்தித்து, செளந்தரராஜன் பணத்தை கொடுத்தாா். அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட ஹக்கீம், அங்கிருந்த பொக்லைன் ஓட்டுநா் வாகித் அலியிடம் கொடுத்தாா். தான் வெளியில் செல்வதாகவும், மோட்டாா் வாகன ஆய்வாளா் சண்முக ஆனந்த் வந்ததும் இந்த பணத்தை கொடுக்குமாறும் கூறிவிட்டுச் சென்றாா். இந்த நிலையில் பிற்பகல் நேரத்தில் தானியங்கி ஓட்டுநா் தோ்வு மைதானத்துக்கு வந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் சண்முக ஆனந்த், பொக்லைன் ஓட்டுநா் வாகித் அலியிடமிருந்து லஞ்சப் பணம் ரூ.5,800-ஐ வாங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ. நாகராஜன் தலைமையிலான போலீஸாா் சண்முக ஆனந்தை கைது செய்தனா்.









