கன்னிவாடி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, ரெட்டியாா்பட்டி குடியிருப்பைச் சோ்ந்தவா் கு. பாலசுப்பிரமணி (48). இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனா். இவா் திண்டுக்கல்- பழனி சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் ரெட்டியாா்பட்டி குடியிருப்பு மயானப் பகுதியில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், கன்னிவாடி காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பாலசுப்பிரமணியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணங்கள் குறித்தும் போலீஸாா் விசாரித்தனா்.









