மாற்றுத்திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை அனைத்துத் தரப்பினரும் செய்ய வேண்டும் என்று மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மதுரை ஜிஎம்எஸ் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் கடம்ப விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளின் குழு செயல்பாடு, விளையாட்டுத் துறையில் சாதித்த மாற்றுத் திறனாளிகள், சுய முயற்சியில் முன்னேறிய
மாற்றுத்திறனாளிகள், சமூக சேவையில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் என நான்கு வகையான பிரிவில் சாதனை புரிந்த 46 மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் ராஜகுமாரி ஜீவகன் தலைமை வகித்தார்.
விழாவில் மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கி பேசியது:
சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகளும் சமமாக வாழவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பணமாகத்தான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. பணமாக கொடுத்த உதவ முடியாதவர்கள் தங்களுடைய உடலுழைப்பு மூலம் உதவி செய்யலாம். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நூல்களை வாசித்துக் காட்டுவது போன்ற உதவிகளை மாணவர்கள் செய்யலாம்.
இதுபோன்ற பல்வேறு வகையான நம்மால் முடிந்த உதவிகளை கட்டாயம் செய்ய
வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை கட்டாயம் உருவாக்க வேண்டும் என்றார்.
விழாவில் ஜிஎம்எஸ் அறக்கட்டளையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கை தேவைக்காக மற்றவர்களை
நம்பியிராமல் இருக்க சோப் ஆயில், பினாயில் போன்றவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. அவற்றை மாற்றுத்திறனாளிகள் வெளிச்சந்தையில் விற்று அந்தத்தொகையை தங்கள் வாழ்க்கைத் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







