வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

"நீட்' தேர்வுக்கான உறைவிடப் பயிற்சிக்கு 133 மதுரை மாணவ, மாணவியர் தேர்வு

மாநில அளவில் வரும் ஏப்ரல் முதல் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான உறைவிடப் பயிற்சியில் பங்கேற்க மதுரை மாவட்டத்தில் 133 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :29 மார்ச் 2018, 2:53 am

மாநில அளவில் வரும் ஏப்ரல் முதல் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான உறைவிடப் பயிற்சியில் பங்கேற்க மதுரை மாவட்டத்தில் 133 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 தமிழகத்தில் நடப்பாண்டு முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியின் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாநிலத்தில் ஐந்து மண்டலங்களாகப் பிரித்து அங்கு நீட் தேர்வுக்கு மாணவ, மாணவியர் தங்கவைத்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
 மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் தமிழ் வழி, ஆங்கில வழி என பிரித்து நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி நீட் நுழைவுத் தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அதில் 289 பேர் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. நீட்டுக்கு மதுரையில் விண்ணப்பித்த 289 பேரில் தமிழ் வழிப்பாடத்தில் 32 மாணவியரும், 59 மாணவர்களும், ஆங்கில வழி பாடத்தில் 18 மாணவியரும், 24 மாணவர்களும் நீட் உறைவிடப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களால் தேர்வு செய்யப்பட்டு, அதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
 தேர்வான மதுரை மாவட்ட மாணவ, மாணவியரில் தமிழ் வழி படித்தவர்கள் அனைவரும் திண்டுக்கல் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள ஆர்.வி.எஸ்.பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் சிறப்புப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். அதேபோல ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவ, மாணவியர் விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் உறைவிட சிறப்புப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.
 உறைவிடப் பயிற்சியானது வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் தங்கமிடம், உணவு ஆகியவை இலவசம். மேலும், அதில் பங்கேற்கும் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினியும் அரசு சார்பில் வழங்கப்படவும் உள்ளது.
 மதுரை மாவட்டத்திலிருந்து தேர்வாகிச் செல்லும் மாணவ, மாணவியருடன் ஆசிரியர்கள் செல்கின்றனர். உறைவிட பயிற்சியின் போது மாணவ, மாணவியருக்கான மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்தையும் அரசே செய்துள்ளது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.