மதுரை மாநகராட்சி சிங்கராயர் காலனிப் பகுதியில் டெங்கு தடுப்பு ஆய்வை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டார்.
டெங்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் ஞாயிற்றுக்கிழமை காலை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) பகுதியில் உள்ள 41 வது வார்டில் உள்ள சிங்கராயர் காலனிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் வீடு வீடாகச் சென்று குடிநீர் சேமிக்கும் தொட்டிகள், வீடுகளுக்குள் உள்ள டிரம்கள், குடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அப்போது பெண்களிடம் குடிநீர் பாத்திரங்களை மூடி வைக்குமாறு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேலும் வீடுகளில் தேவையற்ற பொருள்களை சேமிக்க வேண்டாம் என்றும், டயர், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து சொக்கிகுளம் பகுதிக்கு வந்த ஆட்சியர், அங்கிருந்த உழவர் சந்தையில் பொதுமக்களிடம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.
பின்னர் உழவர் சந்தையில் காய்கறிக் கடைகளில் வைத்திருந்த எடைக்கற்கள் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்றும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி (மண்டலம் 2) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








