சித்திரைத் திருவிழா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெளியிட்டதாக முகநூலில் தவறான தகவலைப் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதி தேர்தல் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலர் இரா.விஜயராஜன் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை: மதுரையில் தேர்தலைத் தள்ளி வைக்கத் தேவையில்லை. சித்திரைத் திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடை விதிக்கலாம். ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லையென்றால், மதுரை அழிந்துவிடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் பதிவிட்டதாக முகநூலில் வெள்ளிக்கிழமை பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. இந்தப் பதிவு உண்மைக்கு மாறானது. அவரது தேர்தல் வெற்றி வாய்ப்பைத் தடுக்க வேண்டுமென்ற தவறான உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது.
எனவே தேர்தல் அதிகாரி மற்றும் காவல் ஆணையர் தலையிட்டு பதிவிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவை நீக்க வேண்டும். பதிவு தவறானது என்று விளம்பரப்படுத்த வேண்டும்.
பதிவைப் பகிர்ந்தவர்கள், பதிவில் பின்னூட்டமிட்டவர்கள், பதிவை விரும்பியவர்கள் ஆகியோரின் கணக்குகளில் மறுப்பையும், மன்னிப்பையும் பதிவிட சம்பந்தப்பட்டவருக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.