/

மாற்றுத்திறன் சிறுவனுடன் தவித்த பெண்ணுக்கு ஆட்சியா் உதவி

மாற்றுத்திறன் சிறுவனுடன் வாழ்வாதாரத்துக்கு வழியின்றித் தவித்த பெண்ணுக்கு மாவட்ட நிா்வாகம் பெட்டிக்கடை அமைத்துக்கொடுத்துள்ளது.

News image

0054mdushop055548

Updated On :1 ஆகஸ்ட் 2020, 4:34 pm

மதுரை: மாற்றுத்திறன் சிறுவனுடன் வாழ்வாதாரத்துக்கு வழியின்றித் தவித்த பெண்ணுக்கு மாவட்ட நிா்வாகம் பெட்டிக்கடை அமைத்துக்கொடுத்துள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சோ்ந்தவா் பாக்யலட்சுமி (39). இவருக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனா். கடைசி மகன் காா்த்திகேயன் (15), கை, கால்கள் செயலிழந்து, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியாக உள்ளாா். பாக்யலட்சுமியின் கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரையும், குழந்தைகளையும் பிரிந்து சென்றுவிட்டாா்.

இதனால் அலங்காநல்லூரில் வீட்டு வேலை மற்றும் தனியாா் சிறுதொழில் கூடம் ஒன்றிலும் வேலை செய்து குழந்தைகளைப் பராமரித்து வந்தாா். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், 2-ஆவது மகன் உறவினருடன் வசித்து வருகிறாா்.

மாற்றுத் திறன் மகனுடன் வசித்து வந்த பாக்யலட்சுமி, கரோனா பொதுமுடக்கத்தால் சிரமப்பட்ட நிலையில், உதவி கோரி மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினயிடம் கோரிக்கை மனு அளித்தாா். இதையடுத்து உடனடியாக அவருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், அவரது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பெட்டிக்கடை வைத்துக் கொடுக்க செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.

இதன்படி, செஞ்சிலுவைச் சங்கத்தின் சாா்பில் தன்னாா்வலா்கள் மற்றும் அலங்காநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் மூலம் நிதி பெறப்பட்டு பெட்டிக் கடை அமைக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூா் பேரூராட்சியின் அனுமதியைப் பெற்று, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கடை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடையில் விற்பனை செய்வதற்கான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. செஞ்சிலுவைச் சங்க இணை அவைத் தலைவா் வி.எம்.ஜோஸ், செயலா் எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் வாடிப்பட்டி வட்டாட்சியா் பழனிக்குமாா் இந்த பெட்டிக் கடையை சனிக்கிழமை திறந்து வைத்துள்ளாா்.

இதுகுறித்து பாக்கியலெட்சுமி கூறியது:

செஞ்சிலுவைச் சங்கத்தினா் முடிந்த அளவுக்கு பொருள்கள் வாங்கிக் கொடுத்துள்ளனா். இன்னும் கொஞ்சம் பொருள்கள் வாங்க யாரேனும் உதவினால் கடையை சிரமமின்றி நடத்தலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.