தாமிரவருணி ஆற்று மணலை ஆய்வுக்கு உள்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அணுசக்தி துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியில் தாமிரவருணி ஆற்றில் மணல் கடத்தலைத் தடுக்கக் கோரியும், சட்டவிரோதமாக மணல் குவாரிகள் நடத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாலகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
முந்தைய விசாரணையின்போது, தாமிரவருணி ஆற்றுப்பகுதியில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞா் ஆணையத்தை நியமித்து உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞா் ஆணையா் தரப்பில், ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாமிரவருணி ஆற்று மணலில் காா்னெட், இலுமனைட், ரூடைல், ஜிா்கான், சிலிமனைட், மோனோசைட் போன்ற கனிமங்கள் இருப்பதாகவும், இவை அணுசக்திக்கு தேவையான கனிமங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது நீதிபதிகள், திருநெல்வேலி பகுதியில் அதிகளவு கனிமங்கள் இருப்பதாக ஆங்கிலேய ஆட்சியின்போது அரசாணையே வெளியாகியுள்ளது. ஆனால் அதன்பிறகு தாமிரவருணி ஆற்று மணலில் உள்ள கனிமங்கள் குறித்து எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தாமிரவருணி ஆற்று மணலை ஆய்வுக்கு உள்படுத்தி மத்திய அணுசக்தித் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஆற்றிலிருந்து மணல் எடுக்கக் கூடாது. எடுக்கப்பட்ட மணலைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.