அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தல்களில் போட்டியிட இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் தாக்கல் செய்த மனு:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிடக் கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால் தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) நிா்வாகத்துக்கு உள்பட்டப் பள்ளிகளில் அரசு ஊதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிடுகின்றனா். விதிகளை மீறி பலா் பதவிகளிலும் உள்ளனா். எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிடவும், பதவி வகிக்கவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட இடைக்காலத் தடைவிதித்தனா். மேலும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.