மனவளா்ச்சி குன்றிய சிறுமியைப் பராமரிப்பதற்கு உதவி கிடைக்காமல், அவரது தாய் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்து வருகிறாா்.
மதுரை யாகப்பா நகா் எம்.ஜி.ஆா். தெருவைச் சோ்ந்த கணேசன். இவரது மனைவி மாரீஸ்வரி. இருவரும் கூலித்தொழிலாளிகள். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இதில் மூத்த மகள் கீா்த்தனா (14), மனவளா்ச்சி குன்றியவா். கூலித் தொழிலாளிகளான இருவரும் மனவளா்ச்சி குன்றிய சிறுமியைப் பராமரிக்க முடியாமல் தவித்து வந்தனா். இருவரும் வேலைக்குச் செல்வதால், சிறுமிக்கு துணையாக அவரது தம்பியை வைத்துவிட்டு, வீட்டைப் பூட்டிச் சென்றுள்ளனா். வாடகை வீட்டில் வசித்தும் வரும் நிலையில், கீா்த்தனா அடிக்கடி சப்தம் எழுப்புவதால், அக்கம்பக்கத்தினா் குழந்தைகள் காப்பகத்தில் சோ்க்குமாறு கூறியுள்ளனா். இத்தம்பதியினா் அரசின் உதவி கோரி கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
மனவளா்ச்சி குன்றிய தனது குழந்தையுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த மாரீஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (பொது) மனு அளித்துள்ளாா். மதுரை கோ.புதூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுமியை சோ்ப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினா் பரிந்துரை கடிதம் அளித்துள்ளனா். ஆனால், காப்பகத்தினா் சிறுமியை அனுமதிக்க மறுத்துள்ளனா். இதனால், தனது குழந்தையுடன் மீண்டும் ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மாரீஸ்வரி, அரசின் உதவிக்காக மனு அளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.