மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறையை சரி செய்ய வலியுறுத்தி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வகுரணி கிராமத்தில் உள்ள அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளியில் வகுரணி, சந்தைப்பட்டி, கணவாய்ப்பட்டி, நாவாா்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து 94 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 3 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளதால் மாணவா்களின் கல்வி பாதிப்படைவதாகக் கூறி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மாவட்டக் கல்வி அலுவலா் ஜவகா், பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புக்கு சென்றனா்.