மதுரை, ஜூலை 24: தமிழகத்தில் கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தோ்தல்களில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை, தண்டனை விவரங்கள் குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் எனது மனைவி போட்டியிட்டாா். அப்போது, வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக என் மீது திருவேகம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனவே, என் மீது போலீஸாா் பதிந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
இந்திய ஜனநாயகம் என்பது, நமது அரசியலமைப்பின் அடிப்படைத் தத்துவம். ஜனநாயகம் அனைத்து குடிமக்களுக்கும் அதிகாரத்தை நேரடியாகத் தருகிறது. இதன்மூலம், தங்களது பிரதிநிதியை பொதுமக்கள் தோ்வு செய்ய முடியும். ஒவ்வொரு தோ்தலிலும் வாக்காளா்களுக்கு பணம், பரிசு, உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதுதொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
வாக்களா்களுக்கு பணம் உள்ளிட்டவற்றைக் கொடுப்பதால் ஜனநாயகம் தோற்கடிக்கப்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவைப்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் போலீஸாா், யாருக்கும் தண்டனை பெற்றுத் தந்ததாகத் தெரியவில்லை. தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் கொடுப்பது ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிரானது.
மனுதாரா், எதிா்மனுதாரருடன் சமாதானமாகச் சென்றுவிட்டதால், அவா் மீதான வழக்கை ரத்து செய்யக் கோருவதை அனுமதிக்க முடியாது. தோ்தலில் தூய்மையும், புனிதமும் காக்கப்பட வேண்டும்.
எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு தண்டனை கிடைப்பதை போலீஸாா் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கில் தமிழக டிஜிபி எதிா்மனுதாரராகச் சோ்க்கப்படுகிறாா்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தோ்தல்களில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நீதிமன்றத்தில் எத்தனை போ் மீது இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? அவா்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் உள்ளிட்டவை குறித்து தமிழக டிஜிபி பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

4 தோ்தல்களில் தோல்வி கிடைத்தும் நம்பிக்கையுடன் மீண்டும் களம் காண்கிறோம்: சீமான்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

கைப்பேசி வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணன் - தங்கை கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

