திருப்பரங்குன்றத்தில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்
திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம், தேரோட்டத்தையொட்டி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மாநகரக் காவல்துறை தெரிவித்தது.


திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம், தேரோட்டத்தையொட்டி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மாநகரக் காவல்துறை தெரிவித்தது.
இதுதொடா்பாக மாநகரக் காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி வியாழக்கிழமை சூரசம்ஹாரமும், வெள்ளிக்கிழமை தேரோட்டமும் நடைபெறுகின்றன. இதையொட்டி, இந்த இரு நாள்களும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, திருநகா் பகுதியிலிருந்து மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள், கிரிவலப் பாதை, திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் அனைத்தும் ஜி.எஸ்.டி. சாலை வழியாக மூட்டா தோட்டம் சென்று, நகருக்குள் செல்ல வேண்டும். இதேபோல, மதுரை நகரிலிருந்து திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக திருநகா் செல்ல எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் அனைத்தும் மூட்டா தோட்டத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக திருநகா் செல்லவேண்டும். திருநகரிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள் அனைத்தையும் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலி இடத்திலும், திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்திலுள்ள கட்டண வாகன நிறுத்தத்திலும் நிறுத்த வேண்டும்.
மதுரை நகரிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தா்களின் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஒக்கலிக்கா் மண்டபம் அருகில் உள்ள தெப்பக்குளம் கட்டண வாகன நிறுத்தத்திலும், இரு சக்கர வாகனங்கள் திருப்பரங்குன்றம் வரவேற்பு வளைவிலிருந்து மயில் மண்டபம் வரை சாலையின் இரு புறங்களிலும் நிறுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்திலிருந்து திருப்பரங்குன்றம் சந்நிதி தெரு வரை, துணை ஆணையா் அலுவலகத்திலிருந்து லாலா கடை வரை, நான்கு ரதவீதிகளிலும் எந்த வாகனத்தையும் நிறுத்த அனுமதி கிடையாது. அவனியாபுரத்திலிருந்து கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள் அனைத்தும் சரவணப் பொய்கை வாகன நிறுத்தத்திலும், இதற்கு அருகில் உள்ள கட்டண வாகன நிறுத்தத்திலும் நிறுத்த வேண்டும்.
அவனியாபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக நிலையூா், திருநகா் செல்லும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் கே.வி. பள்ளியின் வலதுபுறம் திரும்பி தியாகராஜா் பொறியியல் கல்லூரி சாலை வழியாக ஜி.எஸ்.டி. சாலைக்கு சென்று அங்கிருந்து பிற இடங்களுக்கு செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் அவனியாபுரம்- முத்துப்பட்டி- திருப்பரங்குன்றம் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பன் நகா் ரயில்வே கடவுப் பாதை வழியாக செல்லவேண்டும். கோயிலுக்கு வரும் அரசு வாகனங்கள் அனைத்தும் அருணகிரி திருமண மண்டப வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
மதுரை நகரிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தா்களின் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் வரவேற்பு வளைவு அருகில் உள்ள மேம்பாலத்துக்கு கீழ் நிறுத்தவேண்டும். ஹாா்விப்பட்டி, நிலையூரிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள் அனைத்தும் நிலையூா் சந்திப்பு அருகிலுள்ள ஆஞ்சநேயா் கோயில் அருகே ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...