சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: அரசு சாட்சியாக மாற விரும்பும் காரணங்களை பட்டியலிட்டு காவலா் ஆய்வாளா் மனு

Updated on
1 min read

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா், அரசு சாட்சியாக மாற விரும்புவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு மதுரை நீதிமன்றத்தில் புதிய மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீஸாா் சட்டவிரோதக் காவலில் வைத்துத் தாக்கினா். இதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா். இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தனது பிணை மனுக்கள் தொடா்ந்து நிராகரிக்கப்பட்டதால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த மனுவில், அரசு சாட்சியாக மாறி அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க விரும்புவதாக அவா் தெரிவித்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரா் அரசு சாட்சியாக மாற விரும்புவதற்கான காரணங்களை மனுவாகத் தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணை ஜூலை 31-ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் மனு மீதான விசாரணை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமாா் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீதா் அரசு சாட்சியாக மாற விரும்புவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு 17 பக்கங்கள் கொண்ட மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீது வருகிற 4-ஆம் தேதி முடிவெடுக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com