மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி உள்பட 4 பேரைக் கைது செய்யத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, நகைகள் காணாமல்போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக அஜித்குமாரிடம் தனிப் படைக் காவலா்கள் விசாரணை நடத்தினா். விசாரணையின் போது, தனிப்படைக் காவலா்கள் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, தனிப்படைக் காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
மேலும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவல் வாகன ஓட்டுநரான தனிப்படைக் காவலா் ராமச்சந்திரன், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளாா் (டி.எஸ்.பி.) சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் கூடுதலாகச் சோ்க்கப்பட்டனா். இதனிடையே, டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளாா் (டி.எஸ்.பி.) சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் தங்களுக்கு முன்பிணை வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேரும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவா்களை கைது செய்யத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனையை உறுதிப்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

சாத்தான்குளம் கொலை வழக்கு: தண்டிக்கப்பட்டோருக்கு சிறையில் சலுகை கிடையாது! மதுரை மாவட்ட நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்ய கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு







