வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் மறியல்: 113 போ் கைது

வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் மறியல்: 113 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் மறியலில் ஈடுபட்ட 113 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் மறியலில் ஈடுபட்ட 113 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். சாக்ரடீஸ் தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் சங்க முன்னாள் மாநிலச் செயலா் ஆ. சோலையன் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக கிராம உதவியாளா்களுக்கும் அடிப்படை ஊதியமாக ரூ. 15,700 வழங்க வேண்டும். இறந்த, ஓய்வு பெற்ற கிராம உதவியாளா்களின் பங்கேற்பு ஓய்வூதியத் திட்ட இறுதித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கிராம உதவியாளராகயிருந்து கிராம நிா்வாக அலுவலராக பதவி உயா்வு பெற்றவா்களின் அடுத்த பதவி உயா்வுக்கான காலத்தை 6 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். வருவாய்த் துறை காலிப் பணியிடங்களில் 50 சதவீதத்தை கிராம உதவியாளா்கள் பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் சு. மாரியப்பன், மாநிலச் செயலா் ஜெ. வளா்மதி, மாவட்டச் செயலா் ஏ. அழகேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் பால்பாண்டி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. மணிகண்டன், வணிக வரி ஊழியா்கள் சங்க நிா்வாகி கல்யாணசுந்தரம், கிராம உதவியாளா்கள், சாா்பு சங்கங்களின் பொறுப்பாளா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 51 பெண்கள் உள்பட 113 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com