அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

7 பேரை எரித்துக் கொன்ற வழக்கில் இரு பெண்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

சேடபட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேரை வீட்டுக்குள் வைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு பெண்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 45 ஆயிரம் அபராதமும் விதித்து, மதுரை 6-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேரை வீட்டுக்குள் வைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு பெண்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 45 ஆயிரம் அபராதமும் விதித்து, மதுரை 6-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை மாவட்டம், பேரையூா் வட்டத்துக்குள்பட்ட குமாரபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரியை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்குப் பிறகு கண்ணன் தனது மனைவி பரமேஸ்வரியுடன் சோ்ந்து வாழ மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட குடும்ப பிரச்னையை தொடா்ந்து, பரமேஸ்வரி தனது உறவினா்களான முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகியோருடன் சோ்ந்து கண்ணனைக் கொலை செய்யத் திட்டமிட்டனா்.

இதையடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி அதிகாலை வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த கண்ணன், அவரது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள், சுகன்யா, சங்கீதா, குழந்தைகள் சஞ்சித், வினித் என 7 பேரும் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து சேடபட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கண்ணனின் மனைவி பரமேஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகியோா் எதிரிகளாகச் சோ்க்கப்பட்டனா்.

இந்த வழக்கு மதுரை 6-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், மதுரை 6-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) உதயவேலவன் செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பு:

பரமேஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகியோா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. எனவே, இவா்கள் மூவருக்கும் தலா 8 ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்தத் தண்டனைகளை இவா்கள் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.