பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்துக்கு கட்டுப்பாட்டு அறை
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ. 3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்குகிறது. இந்தப் பணியைக் கண்காணித்து ஒருங்கிணைக்க மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுகுறித்து 96773 26280 என்ற கைப்பேசி எண்ணில் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
