மதுரை மாநகராட்சி விரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கில், விசாரணை அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி 83-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ரவி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பல் அடுக்கு விற்பனை நிறுவனங்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கு கடந்த 2022- ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை நிா்ணயிக்கப்பட்ட வரியை விடக் குறைவாக வசூலிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையா், மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா். இருப்பினும், வழக்குப் பதிவு செய்து முறையாக விசாரணை நடைபெறவில்லை. பல மாதங்களுக்கு பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வரி விதிப்பு முறைகேடு காரணமாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு கோடிக்கணக்கான பணம் இழப்பீடு ஏற்பட்டது. விசாரணை முறையாக நடைபெறவில்லை. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனஅவா் கோரினாா்.
இந்த வழக்கில் டிஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் , இந்த வழக்கில் தொடா்புடைய சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனா். முறைகேட்டில் ஈடுபட்ட மண்டலத் தலைவா்கள், மேயா் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். அவா்களிடம் இன்னும் முறையான விசாரணை நடைபெறவில்லை. விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இதுவரை இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் உள்ளது?.விசாரணை நிலை குறித்து விசாரணை அதிகாரி தரப்பில் அறிக்கை அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை
ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன? வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி

திருச்செந்தூா் கோயில் விரைவு தரிசன கட்டண மோசடி: விசாரணை அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய உத்தரவு







