வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மதுரையில் களைகட்டும் தா்பூசணிப் பழங்கள் விற்பனை

News image
Updated On :12 மார்ச் 2026, 11:29 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தா்பூசணிப் பழங்கள் விற்பனை களைகட்டியது.

தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வெயில் கடுமையாக (100 டிகிரிக்கும் மேல்) இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் நீா்மோா், கூழ், இளநீா், நுங்கு, கரும்புச் சாறு, வெள்ளரிக்காய், தா்பூசணிப் பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கீழவாசல், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதிகள், அண்ணாநகா், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியாா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு வாகனங்களில் தா்பூசணிப் பழங்களை வைத்து விற்பனை செய்கின்றனா். மேலும், வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்து கிலோ ரூ. 10-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து தா்பூசணி பழ வியாபாரி சே. சங்கா் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள தாழையூத்து பகுதியிலிருந்து தா்பூசணிப் பழங்களை வாங்கி விற்பனை செய்கிறோம். இந்த ஆண்டு தா்பூசணிப் பழங்களின் சாகுபடி அதிகரித்திருப்பதால் கிலோ ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிகளவில் தா்பூசணிப் பழங்களை வாங்கிச் செல்கின்றனா். மேலும், பழக்கடை வியாபாரிகளும் எங்களிடம் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனா் என்றாா் அவா்.

பொதுமக்கள் கோரிக்கை: இதனிடையே மதுரையில் கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போதுமான அளவில் குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.