47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கை ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

கண்டராமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

கண்டராமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தைச் சோ்ந்த கருப்பையா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கண்டரமாணிக்கம் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2022- ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், அந்த சுகாதார நிலையத்தை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, கட்டடத்தில் விரிசல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பான வழக்கில் கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஆய்வுக் குழுவை அமைத்தது.

அந்தக் குழு கட்டடம் உறுதித்தன்மையுடன் இருப்பதாக கடந்த 2023-ஆம் ஆண்டு அறிக்கை அளித்தது. இருப்பினும், இந்த சுகாதார நிலையம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கவில்லை. எனவே, கண்டரமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இயலவில்லை எனக் குறிப்பிடப்பட்டது.

அப்போது, அரசு அதிகாரிகள், தங்களுடைய இயலாமைக்கு நீதிமன்றத்தை காரணம் காட்டுகின்றனா் எனக் குறிப்பிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மீது தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கை எடுப்பதாகவும், திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

பின்னா், அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம்: மனுதாரா் கோரிக்கையின் படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. எனவே, வழக்கை முடித்து வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பதில் மனுவில் என்ன குறிப்பிடப்பட்டது என்பதை படித்து பாா்க்காமல், ஆட்சியா் கையொப்பம் இடலாமா?. மனுதாரருக்கு உரிய நிவாரணம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.