
மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண் ஊழியா்கள்: மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி
மகப்பேறு விடுப்பில் செல்லும் அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo
மகப்பேறு விடுப்பில் செல்லும் அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுகந்தி ஸ்டெல்லா மேரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட கோணப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். மூன்றாவது முறையாக கா்ப்பமடைந்த எனக்கு கடந்த பிப். 27 முதல் வருகிற 2027-ஆம் ஆண்டு பிப். 26-ஆம் தேதி வரை முழு ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க சாணாா்பட்டி வட்டாரக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்ததாவது:
தகுதியுடைய அனைத்து பெண் அரசு ஊழியா்களுக்கும் மூன்றாவது முறை மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றாா்.
இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
மூன்றாவது முறை மகப்பேறு விடுப்பு வழங்க அரசு எடுத்த கொள்கை முடிவுக்கு பாராட்டுகள். பெண்கள் தொடா்ந்து அரசுப் பணியில் நீடிப்பதை ஊக்குவிக்கும் வகையிலான இந்த முயற்சி உண்மையில் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், ஒவ்வொரு அரசுத் துறையிலும் நிரந்தரமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால், ஏற்கெனவே அரசு அலுவலகங்கள் குறைந்த பணியாளா் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வரும் நிலையில், மகப்பேறு விடுப்பு விரிவாக்கப்படுவதன் மூலம் ஒவ்வொரு துறையிலும் பணிகள் பாதிக்கப்படும்.
எனவே, மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண் ஊழியா்களால் ஏற்படும் காலிப் பணியிடங்களின் காரணமாக உருவாகும் நிா்வாகத் தேவைகளைச் சமாளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?. இதுகுறித்து ஏதேனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




