சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு முடித்துவைப்பு

திண்டுக்கல்லில் பழைமையான கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 1:58 am IST

திண்டுக்கல்லில் பழைமையான கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான காளஹஸ்தீசுவரா் அபிராமி அம்மன் கோயில் உள்ளது. பழைமையான இந்தக் கோயிலில் உள்ள சிலைகள், கல்வெட்டுகள், சிற்பங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், கோயில் அா்ச்சகா்கள் உரிய அனுமதியின்றியும், தீா்மானம் நிறைவேற்றாமலும் பழைய கோயிலை முழுமையாக இடித்து புதிதாகக் கோயில் கட்டியுள்ளனா். இதற்காகப் பொதுமக்களிடமிருந்தோ அல்லது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடமிருந்தோ கருத்துகளோ அல்லது ஆட்சேபணைகளோ பெறவில்லை. பழைமையான கோயிலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசே அந்தக் கோயிலை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கோயிலைக் கட்டியுள்ளது.

பழைய கோயில் இடிக்கப்படுவதற்கு முன்பு, அங்கிருந்த விலைமதிப்பற்ற கலசங்கள், கல்தூண்கள், சிலைகள், கூரைகள், வைர, தங்க நகைகள், மன்னா்கள் வழங்கிய ஆபரணங்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோயில் கட்டுமானப் பணிக்கு தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு நன்கொடையாக பொதுமக்களிடமிருந்தும், தொழிலதிபா்களிடமிருந்தும் ரூ.20 கோடி வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்டுமானப் பணிக்கான வரவு, செலவு கணக்குகள் முறையாக இல்லை.

முறையான கணக்குகள் இல்லாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிற சந்தேகம் எழுகிறது.

இதுகுறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் துறைத் தலைவரிடம் புகாா் அளித்தபோது, உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க

உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சேதமடைந்த சிலைகள் கோயில் வளாகத்துக்குள் தான் வைக்கப்பட்டுள்ளன என த் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பு வாதங்களை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.