தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பெண் மருத்துவரைக் கட்டிப்போட்டு 40 பவுன் நகைகள், ரூ.1.30 லட்சம் கொள்ளை

பரமக்குடியில் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தனியாக இருந்த பெண் மருத்துவரைக் கட்டிப்போட்டு, 40 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் மதிப்பிலான வைரத் தோடு, 20 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1.30

Updated On :21 மே 2018, 7:17 pm

பரமக்குடியில் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தனியாக இருந்த பெண் மருத்துவரைக் கட்டிப்போட்டு, 40 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் மதிப்பிலான வைரத் தோடு, 20 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் 4 பேர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.
பரமக்குடி மூவேந்தர் நகர் 4-ஆவது தெருவில் வசித்து வருபவர் மருத்துவர் பாலச்சந்திரன். இவரது மனைவியும் மருத்துவரான கிருஷ்ணவேணி (61). இவர்களது 2 மகன்களில் ஒருவர் ஏர்வாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் சென்னையில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறார்.
சென்னையில் படிக்கும் மகனைப் பார்ப்பதற்காக பாலச்சந்திரன் சென்றிருந்துள்ளார். இதனால் வீட்டில் தனியாக கிருஷ்ணவேணி இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டைப் பூட்டிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணவேணி அப்படியே அயர்ந்து தூங்கியுள்ளார்.
திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் 4 பேர் முகங்களை துணியால் மறைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த கிருஷ்ணவேணியிடம் மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதில் பயந்துபோன அவர் என்னைக் கொன்று விடாதீர்கள் எனக் கூறி, தான் அணிந்திருந்த சங்கிலி, வைரத் தோடு, வளையல்கள் உள்ளிட்டவற்றை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அதையடுத்து, அவர்கள் 4 பேரும் மருத்துவரின் வாயை துணியால் மூடி, அவரது கை, கால்களை கட்டிப்போட்டு அறைக்குள் வைத்துவிட்டனர். பின்னர், பீரோவில் இருந்த 20 கிலோ வெள்ளிப் பொருள்கள், நெக்லஸ் மற்றும் ரூ. 1.30 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
சிறிதுநேரம் கழித்து சேலையால் கட்டப்பட்டிருந்த கைகளை அவிழ்த்த கிருஷ்ணவேணி, வெளியே வந்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த டி.ஐ.ஜி. என். காமினி தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர். நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். காவல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதில், அது தெரு வழியாக ஓடி வைகை ஆற்றங்கரைப் பகுதியில் நின்றுவிட்டது. அங்கு, மர்ம நபர்கள் விட்டுச்சென்ற இரு சக்கர வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர். மோப்ப நாயை திசை திருப்பும் வகையில், கொள்ளையர்கள் வீட்டிலிருந்த நறுமணப் பாட்டில்களைப் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதுகுறித்து டி.ஐ.ஜி. காமினி கூறியது: கொள்ளை நடந்த வீட்டில் குற்றவாளிகள் தடயங்களை விட்டுச் சென்றுள்ளனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.