தமிழக கடலோரப் பாதுகாப்பு படை சார்பில், "ஸீ-விஜில்' என்ற பாதுகாப்பு ஒத்திகை ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
கடல் வழியாக வந்து மும்பையில் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய-மாநில அரசுகள் கடலோரப் பாதுகாப்பை தீவிரப்படுத்தின. அதனடிப்படையில், ஆண்டுதோறும் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் கடல்வழிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் "ஸீ-விஜில்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடல் வழியை கொண்டது என்பதாலும், இலங்கைக்கு மிக அருகில் இருப்பதாலும், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இதில், கடலோரப் பாதுகாப்பு காவல் துறை ஏ.டி.எஸ்.பி. இளங்கோ, இந்தியக் கடலோரக் காவல்படை கமாண்டர் வெங்கடேஷ், கடற்படையினர், மாவட்டக் காவல் துறையினர் மற்றும் மத்திய-மாநில உளவுத் துறையினர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபடுவது போன்று ஒத்திகை நடத்தினர்.
மேலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக வந்த விசைப்படகை நிறுத்தி, அதிலிருந்த மர்ம நபர்கள் 7 பேரை கடற்படையினர் பிடிப்பது போன்றும், ராமேசுவரத்தில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி வந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்வது போன்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாதுகாப்பு ஒத்திகையில், இந்தியக் கடலோர காவல் படையினர், கடற்படையினர், கடலோர காவல் துறையினர் மற்றம் மாவட்டக் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமையும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









