ராமேசுவரம்: மண்டபம் கடற்கரையில் நிறுத்தியிருந்த இரண்டு விசைப்படகுகள் கடலில் மூழ்கின.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதில் மண்டபத்தில் 113.20 மிமீ மழை பெய்தது. இதில், மண்டபம் வடக்கு துறைமுகப் பகுதியில் நிறுத்தியிருந்த தங்கச்சிமடம் நிர்மல், சக்ரியாஸ் ஆகியோரது விசைப்படகுகளின் நங்கூரம் காற்றின் வேகத்தில் அறுந்து நடுக்கடலில் மூழ்கின. இரண்டு படகுகளையும் சக மீனவர்கள் மீட்டனர்.