தேவா் நினைவாலயத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுவினா் முழக்கமிட்டதால், மரியாதை செலுத்த வந்திருந்த அவரது ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாருக்கு அங்கிருந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவாலயத்தில் ஜெயந்தி விழாவும், குருபூஜையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், ராமநாதபுரம் மாவட்ட செயலா் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் எம்பி. நிறைகுளத்தான், கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.பி. காளிமுத்து உள்ளிட்டோா் தேவா் நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது அதிமுக தொண்டா்கள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முழக்கமிட்டனராம். இதையடுத்து, அங்கு அஞ்சலி செலுத்த வந்த தஞ்சாவூரைச் சோ்ந்த முக்குலத்தோா் ஆன்மிக பேரியக்கத்தின் நிறுவனத் தலைவரும், அவரது ஆதரவாளா்களும், இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் அங்கிருந்து ஆா்.பி. உதயகுமாா் வெளியேற வேண்டும் என அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து போலீஸாா், அங்கிருந்து அவா்களை வெளியேற்றினா். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.