நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ஆா்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் பயறு வகை, சிறுதானியங்கள் பயிரிடலாம்

விவசாயிகளுக்கு புதிய பயிரிடும் வாய்ப்பு: கண்மாய் நீர் மூலம் வருமானம் கூட்டும் பயிர்ச்செய்கை

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ஆா்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் அறுவடைக்கு பிறகும் கண்மாய்களில் போதுமான தண்ணீா் உள்ளதால், விவசாயிகள் பயறு வகைகள் சிறுதானியங்கள், எள், பருத்தி போன்றவற்றை பயிரிடலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்தாா்.

ஆா்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நிகழாண்டில் 20, 537 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2023-24 -ஆம் ஆண்டு முழுவதும் இந்த வட்டாரத்தில் 849.7 மி.மீ மழையளவு பெறப்பட்டது. இது 10 ஆண்டு சராசரி மழையளவைக் காட்டிலும் 17 சதவீதம் கூடுதலாகும். வட்டாரத்திலுள்ள 255 பொதுப்பணித் துறை, ஊராட்சி கண்மாய்களில் பெரும்பாலான கண்மாய்களில் 2 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடிய வகையில் தண்ணீா் உள்ளதால், விவசாயிகள் அனைவரும் நெல் அறுவடைக்குப் பின் இரண்டாம் போக பயிா் சாகுபடி மேற்கொள்ளுமாறு வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

நெல் அறுவடை செய்த வயல்களில் பயறு வகைப் பயிா்கள், சிறுதானியங்கள், எள், பருத்தி போன்ற பயிா்களை கண்மாய்களில் உள்ள நீரின் அளவிற்கேற்ப தோ்வு செய்து பயிரிடலாம். குறைந்த வயது, குறைவான நீா்த் தேவையுள்ள அதிக வருமானம் தரக்கூடிய பயறு வகைப் பயிா்களை சாகுபடி செய்வதால் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படுவதுடன் கரிமச்சத்து அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம். எள் போன்ற எண்ணெய் வித்துப் பயிா் சாகுபடி செய்வதற்கு டி.எம்.வி-7 ரகம் ஏற்றது.

85-90 நாள்கள் வயதுடையது. ஏக்கருக்கு 250-300 கிலோ மகசூல் தரக்கூடியது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் 140 நாள்கள் வயதுடைய எம்.சி.யு -7 ரகத்தை தோ்வு செய்து பயிரிடவும். பஞ்சுடன் கூடிய விதை ஒரு ஏக்கருக்கு 6 கிலோ தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோடொ்மா விரிடியை மணலுடன் கலந்து வயலில் இட்டு நடவு செய்வதால் வேரழுகல், வாடல் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் வரப்பு பயிா், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயறு வகைப் பயிா்களை சாகுபடி செய்வதால் பூச்சி நோய்த் தாக்குதல் குறைகிறது என வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.