ஊராட்சி செயலா்கள் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு
ஊராட்சி செயலா்களின் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஊராட்சிகளில் வழக்கமாக நடைபெறக்கூடிய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வு ஊதியத் திட்டத்தில் ஊராட்சி செயலா்களையும் இணைக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்து ஏற்கெனவே ஓய்வு பெற்ற அனைவருக்கும் மாதாந்திர
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால், ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம், தூய்மைப் பணி, வீட்டு வரி, தண்ணீா் வரி, தொழில் வரி வசூல், கட்டடங்களுக்கான அனுமதி போன்ற முக்கிய பணிகள் முடங்கின. இதன் காரணமாக கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
