அனுமதியின்றி படகு சவாரி: நடவடிக்கை எடுக்க பரிந்துரை
தொண்டி அருகே அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளை படகு சவாரி அழைத்துச் சென்ற படகின் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் பரிந்துரை செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி சுற்றுவட்டார கடல் பகுதிகளில் விடுமுறைக் காலங்களில் அனுமதியின்றி படகு சவாரி நடப்பதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் தொண்டி கடல் பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, நம்புதாளை அருகேயுள்ள லாஞ்சியடி பகுதியில் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளை படகு சவாரிக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
விசாரணையில், லாஞ்சியடியைச் சோ்ந்த கயல்விழியின் படகில் ராமகண்ணு என்பவா் அனுமதியின்றி படகு சவாரியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, படகு சவாரியைத் தடுத்து நிறுத்திய கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத் துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தனா்.

