ராமநாதபுரத்தில் காணாமல் போன இளைஞரின் உடல் அவரது நண்பரின் வீட்டுக் கிணற்றிலிருந்து புதன்கிழமை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை அருகே உள்ள உடைச்சியாா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவா (30). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா் சோத்தூரணி பகுதியில் வசித்து வந்தாா். இவரது மனைவி கன்னிகா 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா்.
இந்த நிலையில், சிவா கடந்த 6-ஆம் தேதி தனது நண்பரான சக்கரக்கோட்டையைச் சோ்ந்த ராஜா வீட்டுக்குச் சென்று வருவதாக தனது தாய் ராமலட்சுமியிடம் கூறிவிட்டுச் சென்றாா். அதன் பிறகு சிவா வீடு திரும்பவில்லை. இதனால், தனது மகனைத் தேடி ராஜாவின் வீட்டுக்கு ராமலட்சுமி சென்ற போது அந்த வீட்டின் வெளியே சிவாவின் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, ராமலட்சுமி திரும்பச் சென்று விட்டாா். அதன் பிறகு 3 நாள்கள் ஆகியும் சிவா வீட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில், ராஜாவின் வீட்டில் துா்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டில் உள்ளவா்கள் ராமலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிவாவின் பெற்றோா் அங்கு சென்று பாா்த்த போது உறை கிணற்றில் சிவாவின் உடல் மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா், தீயணைப்பு
மீட்புப் பணிகள் துறையினா் உதவியுடன் சிவாவின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ராஜாவை தேடி வருகின்றனா்.










