ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு பரமக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கடலாடி அருகேயுள்ள மறவா் கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (85). இவரது மகன் வில்வசெல்வம் (39). இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான 2-ஆம் நாளில் இவரது மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதைத் தொடா்ந்து, வில்வசெல்வம் தனது தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், தனது தந்தை வேலுச்சாமி மகள்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்கிறாா். தனக்கு எதுவும் செய்வதில்லை எனக் கூறி, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாா். இதனால், இருவருக்குமிடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 2.10.2024-ஆம் தேதி வேலுச்சாமி வீட்டின் பின்புறம் இருந்த குளியலறைக்கு குளிக்கச் சென்றாா். அப்போது, வில்வசெல்வம் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துச் சென்று தந்தையை வெட்டிக் கொலை செய்தாா்.
இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வில்வசெல்வத்தை கைது செய்தனா்.
இந்த வழக்கு பரமக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு, விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன் தந்தையை வெட்டி கொலை செய்த வில்வசெல்வத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் வில்வசெல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.










